வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் – இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் இல்லத்தை முற்றுகையிட முயற்சி
வங்கதேச தலைநகர் டாக்காவில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளதால், அங்கு பரபரப்பும் அசாதாரண சூழலும் நிலவி வருகிறது.
அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு இடஒதுக்கீடு தொடர்பான அரசின் முடிவை திரும்பப்பெறக் கோரி, மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அதிகாரப்பூர்வ இல்லம் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களால் அவர் இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்தார். அதன் பின்னர், முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், மாணவர் அமைப்பின் முக்கிய தலைவர் உஸ்மான் ஹாடி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு நீதி கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், டாக்காவில் மீண்டும் வன்முறை தீவிரமடைந்தது.
உஸ்மான் ஹாடி கொலை சம்பவத்தை அதிகாரிகள் ஏன் தடுக்கவில்லை? காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்ததற்கான காரணம் என்ன? என்ற கேள்விகளை எழுப்பியபடி, போராட்டக்காரர்கள் இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர்.
அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கற்கள் மற்றும் வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டு, மக்கள் அலறியடித்து ஓடும் சூழல் உருவானது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டாக்கா நகரில் மீண்டும் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.