சேலத்தில் திருமண மண்டபத்தில் புகுந்து தாக்குதல் – திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு
சேலம் கோட்டை பகுதியில் உள்ள இஸ்லாமியருக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் புகுந்து ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக திமுக நிர்வாகி மீது கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
கோட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அந்த திருமண மண்டபத்தின் செயலாளர் நௌமானுக்கும், திமுக பிரமுகர் இப்ராஹிமுக்கும் இடையே ஏற்கெனவே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், சிலருடன் மண்டபத்திற்குள் நுழைந்த இப்ராஹிம், நௌமானை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் மயக்கமடைந்த நௌமான் கீழே விழுந்த நிலையில், இந்த முழு சம்பவமும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது.
படுகாயமடைந்த நௌமானை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் திமுக நிர்வாகி இப்ராஹிமை கைது செய்யக் கோரி, சாதிக் பாஷா என்பவர் சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.