நடுக்கடலில் மயங்கி விழுந்த மீனவர் – இந்திய கடலோர காவல்படையின் துரித மீட்பு
நடுக்கடலில் மீன்பிடி பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மயக்கமடைந்த மீனவரை, இந்திய கடலோர காவல்படையினர் விரைந்து செயல்பட்டு பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
சென்னையில் செயல்படும் இந்திய கடலோர காவல்படையின் பிராந்திய தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 4ஆம் தேதி இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்து கொண்டிருந்த ஒரு மீனவருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக மாநில மீன்வளத்துறையிடமிருந்து தகவல் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில், கடலில் ரோந்து பணியில் இருந்த கடலோர காவல்படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து, சென்னையிலிருந்து சுமார் 45 கடல் மைல் தொலைவில் இருந்த அந்த மீனவரை வெற்றிகரமாக மீட்டனர்.
மீட்கப்பட்ட மீனவர் பின்னர் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.