ஈரானில் போர் அச்சம் தீவிரம் – அமெரிக்கர்களுக்கு அவசர வெளியேற்ற உத்தரவு
ஈரானில் தங்கியிருக்கும் அமெரிக்க குடிமக்கள் உடனடியாக அந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளதைத் தொடர்ந்து, அப்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான அரசியல் மற்றும் ராணுவ மோதல் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் தாமதமின்றி நாட்டை விட்டு புறப்பட வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அமெரிக்க அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டாம் என்றும், விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்படலாம் என்பதால், பயணத்திற்கு முன் விமான நிறுவனங்களுடன் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஏதேனும் காரணங்களால் ஈரானை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டால், பாதுகாப்பான இடங்களில் தங்கிக் கொள்ள வேண்டும் என்றும், அவசியமான உணவு பொருட்கள், குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை முன்கூட்டியே சேமித்து வைத்திருக்க வேண்டும் என்றும் அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.