கருணாநிதி வெளியிட்ட அரசாணை 354-ஐ உடனே அமல்படுத்த வேண்டும் – முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கோரிக்கை
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அரசாணை எண் 354-ஐ தற்போதைய முதல்வர் ஸ்டாலின் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தமிழக அரசு மருத்துவர்கள் கடந்த நான்கரை ஆண்டுகளாக காத்திருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் அரசு மருத்துவர்களை நேரில் சந்தித்து, ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்த ஸ்டாலின், இன்று திட்டமிட்ட வகையில் அரசு மருத்துவர்களின் குரலை அடக்கி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் சேவை செய்த அரசு மருத்துவர்கள், தற்போது தங்களுக்குரிய ஊதியத்திற்காகவே போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாண்புமிகு நீதிமன்றங்களின் உத்தரவுகளையும், தேசிய மருத்துவ அமைப்பின் வழிகாட்டுதல்களையும் கூட திமுக அரசு மதிக்காமல் இருப்பதாக கூறிய அண்ணாமலை, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டுகளில் வழங்கப்பட வேண்டிய நான்கு ஊதிய உயர்வுகள் மறுக்கப்பட்டுள்ளதாகவும், DACP ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு மாற்றாக, மருத்துவர்களை கைது செய்தல், பணியிட மாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் அரசு அவர்களை தண்டித்து வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
கொரோனா காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் குடும்பத்திற்கு இதுவரை அரசு வேலை வழங்கப்படவில்லை என்றும், போராட்டத்தின் போது அரசுப் பேருந்து மோதி உயிரிழந்த பச்சிளம் குழந்தை சிறப்பு மருத்துவர் மணிக்குமாரின் குடும்பத்துக்கு மலர் வளையம் வைத்ததோடு அரசின் நடவடிக்கை முடிந்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சரின் அரசியல் நாடகமும் அதோடு முடிவடைந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே தமிழக பாஜக அரசு மருத்துவர்களின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்ததாக நினைவுபடுத்திய அண்ணாமலை, மக்கள் நலனும் மருத்துவர்களின் நலனும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என தெரிவித்தார்.
ஆனால், திமுக அரசு தொடர்ந்து அரசு மருத்துவர்களை அவமதித்து வருவதாகவும், இதனால் தமிழக மக்களின் ஆரோக்கியமே பாதிக்கப்படுவதை கூட முதல்வர் ஸ்டாலின் உணரவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
உடனடியாக அரசாணை எண் 354 அமல்படுத்தப்பட வேண்டும் என்றும், மறைந்த மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்றும், மருத்துவர் மணிக்குமாரின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். மேலும், அரசு மருத்துவர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளும் தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.