மதுரையில் மிரட்டல் மூலம் நிலம் பெற்றதாக குற்றச்சாட்டு – அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளர் கைது
மதுரையில் ரூ.78 லட்சம் மதிப்புள்ள வீட்டுமனையை மிரட்டல் மூலம் கைப்பற்றியதாக எழுந்த புகாரின் பேரில், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளரும் அவரது மனைவியும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் செயல்பட்டு வரும் விஸ்வாஸ் பிரமோட்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சீத்தாராமன், அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜனின் முன்னாள் உதவியாளரான ஜெய்பாலாஜி தன்னை ஏமாற்றி, மோசடியான முறையில் ரூ.78 லட்சம் மதிப்பிலான நிலங்களை கிரையம் செய்ததாக மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், ஜெய்பாலாஜி மற்றும் அவரது மனைவி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து, ஜெய்பாலாஜி அமைச்சர் அலுவலகத்தில் இருந்து உதவியாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.
இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் ஜெய்பாலாஜி மற்றும் அவரது மனைவி கலாவதி ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இருவரையும் கைது செய்து, மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.