குருதி கறை படிந்த செயல்களுடன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் திமுக – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை, இரத்தக் கறை படிந்த கைகளுடன் திமுக சந்திக்க இருப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் ஒரு காவல் மரணம் என்றும், அவர்மீது நிகிதா அளித்த புகாரில் உண்மை இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ இன்று அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எந்த ஆதாரமும் இல்லாத வழக்கில், குற்றமற்ற ஒருவரை காவலர்கள் கொடூரமாக தாக்கி உயிரிழக்கச் செய்துள்ளதாக நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மனிதநேயமற்ற அடக்குமுறை ஆட்சி நடைபெற்று வருவதற்கு இதைவிட வலுவான சான்று வேறு என்ன இருக்க முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக புகார் அளிக்க வரும் பெண்களிடம் தனிப்பட்ட விவரங்களைத் தோண்டித் தோண்டி விசாரித்து அவமதிக்கும் திமுகவின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை, அஜித்குமார் மீதான புகாரில் மட்டும் அவசரமாகவும் கடுமையாகவும் நடந்துகொண்டதன் காரணம் என்ன? என்றும் அவர் வினவியுள்ளார்.
புகாரின் உண்மைத் தன்மையை முழுமையாக ஆய்வு செய்யாமல், கையில் கிடைத்த அப்பாவியை கம்பால் அடித்து கொல்லும் அளவிற்கு காவலர்களின் மனசாட்சி உறைந்துவிட்டதா? சிந்தனைத் திறன் மங்கிவிட்டதா? அல்லது மேலிட உத்தரவுகளால் அவர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டார்களா? எனவும் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
சிவகங்கை வரை நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், தமது நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறையின் வன்முறையால் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறாதது ஏன்? போன்ற பல கேள்விகள் பொதுமக்களின் மனதில் எழுந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மூலமாக கிடைக்கும் என்றும், ஏழை மற்றும் எளிய மக்களின் உயிரை அலட்சியப்படுத்தும் திமுகவின் அடக்குமுறை ஆட்சி மக்கள் தீர்ப்பால் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.