“பெண் சக்தியின் உருவாக விளங்கியவர்” – ஜெயலலிதாவுக்கு நரேந்திர மோடி பாராட்டு
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை வானொலி மூலம் மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இன்று நடைபெற்ற 131வது மன் கி பாத் நிகழ்ச்சியின் மூலம் மக்களுடன் உரையாடினார்.
அப்போது, டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற ஏஐ மாநாடு 2026 குறித்து விரிவாகப் பேசிய அவர், “அந்த மாநாட்டின் கண்காட்சியில் உலகத் தலைவர்களுக்கு இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு சாதனைகளை அறிமுகப்படுத்தினேன். கால்நடைகளுக்கான சிகிச்சை முறைகளில் இருந்து, விவசாயிகள் தங்கள் பால் பண்ணைகளை 24 மணி நேரமும் ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் கண்காணிக்கும் நிலைக்கு இந்தியா முன்னேறியுள்ளது. இது உலகையே ஆச்சரியப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, மக்கள் மனங்களில் நீங்கா இடம்பிடித்த தலைவராக ஜெ. ஜெயலலிதாவை பாராட்டினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “சமூக நலனுக்காக உழைத்தும், பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கியும் செயல்பட்ட தலைவர்கள் எப்போதும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறார்கள். அம்மா ஜெயலலிதா அவர்கள் அத்தகைய சிறப்பு மிக்க தலைவர்களில் ஒருவர். பிப்ரவரி 24ஆம் தேதி அவரது பிறந்தநாள்.
பெண் சக்தியின் வெளிப்பாடாக விளங்கியவர் ஜெயலலிதா. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்த அவர் எடுத்த உறுதியான நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்கவை. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் எனக்கிருந்த நினைவுகள் இன்னும் தெளிவாக உள்ளன.
இன்றும் நான் தமிழ்நாடு வரும்போது, மக்களிடம் அவர் மீதுள்ள ஆழ்ந்த பாசத்தை உணர்கிறேன். அம்மா ஜெயலலலிதா பற்றி பேசும்போது தமிழக மக்களின் முகங்களில் ஒளி பாய்வதை காண முடிகிறது. குஜராத்தில் நடைபெற்ற எனது பதவியேற்பு விழாக்களிலும் அவர் பங்கேற்றார். அவரது சிந்தனைத் தெளிவு மிகவும் சிறப்பானது” என்று பிரதமர் மோடி கூறினார்.