நில மோசடி புகார் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது விசாரணை நடத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு
நில அபகரிப்பு குற்றச்சாட்டை முன்வைத்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஜெய்பாலாஜி என்பவர் அளித்த மனுவில், கொடிக்குளம் கிராமத்தில் தனக்கு சொந்தமான 2.26 ஏக்கர் நிலம் இருப்பதாகவும், அந்த நிலத்தை வீட்டு மனைகளாகப் பிரித்து வழங்க உதவுவதாக கூறிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தனது ஆடிட்டரின் பெயரில் பொது அதிகாரப்பத்திரமாக மாற்றியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையிலும், முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் புகார் அளித்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், தனது நில அபகரிப்பு குறித்த புகாரை லோக் ஆயுக்தா விசாரித்து, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர் கோரியுள்ளார்.
இந்த மனு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுவில் உள்ள சில பிழைகளை திருத்த அனுமதி வழங்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கின் மேலதிக விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.