கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொலை வழக்கு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த ரவுடி கொலை சம்பவம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 12-ஆம் தேதி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆதி என்ற ரவுடி, 9 பேர் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்த இரவு பணியில் இருந்த நான்கு காவலர்கள் மற்றும் கிரிதரன் என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் அனைவரும் தற்காலிகமாக பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட SSI கிரிதரன், திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
இன்னும் ஆறு மாதங்களில் ஓய்வு பெறவிருந்த நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டதால் அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இந்த கொலை வழக்கில் உயர் அதிகாரிகளின் பொறுப்பை மறைப்பதற்காக தன்னை குற்றப்பாட்டுக்குள்ளாக்கியதாக அவர் அருகிலிருந்தவர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சம்பவம் நடைபெற்ற அன்று இரவு ரோந்து பணியில் இருந்த காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் நடவடிக்கையிலிருந்து தப்பிய நிலையில், தங்களை மட்டும் பொறுப்பேற்க வைக்கப்பட்டதாக கிரிதரன் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.