திமுக அரசின் போலி சமூகநீதி முகமூடி நாளுக்கு நாள் வெளிப்படுகிறது – நயினார் நாகேந்திரன் விமர்சனம்
திமுக அரசு கடைப்பிடித்து வருவதாக கூறும் சமூகநீதி கொள்கை உண்மையில் போலியானது என்பதும், அது தினந்தோறும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என்றும் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சமூகநீதி மாணவியர் விடுதியில் கடந்த இரண்டு மாதங்களாக அரசு சார்பில் மளிகைப் பொருட்கள் வழங்கப்படாததால், அங்கு தங்கிப் படிக்கும் மாணவிகளுக்கு போதிய உணவு கிடைக்கவில்லை என்ற காரணத்தால் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணொளிகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சீராக பெற வேண்டிய இளம் வயது மாணவிகளை, உணவுக்காக சாலையில் அமர்ந்து போராடும் சூழலுக்கு தள்ளிய ஆளும் அரசை கடுமையாக கண்டிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“இலவச உணவு வழங்குகிறோம்” என்ற பெயரில் ஏழை மற்றும் எளிய மக்களின் சுயமரியாதையை தொடர்ந்து பாதித்து வரும் இந்த அறிவாயம் அரசுக்கு ஒருபோதும் மன்னிப்பு கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தமிழக அரசு மாணவர் விடுதிகளின் பெயரை ‘சமூகநீதி விடுதிகள்’ என மாற்றிய போதே, அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் பெயர் மாற்றம் மட்டுமே செய்து இது போன்ற தேர்தல் நாடகம் ஏன் என தாங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.
தேர்தல் நெருங்கும் போதெல்லாம் கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து, பின்னர் அவற்றை செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றும் இந்த மக்கள் விரோத ஆட்சியின் முடிவு காலம் நெருங்கி விட்டதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.