கோயில்களில் நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள் – செல்வாக்கின் பெயரில் விதிமீறும் அதிகாரிகள் மீது அதிருப்தி
தமிழகத்தின் புகழ்பெற்ற கோயில்களில் விசேஷ தினங்களில் சாதாரண பக்தர்கள் பல மணி நேரங்கள் வரிசையில் நிற்க வேண்டிய சூழலில், அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களின் அதிகாரம், செல்வாக்கை பயன்படுத்தி முன்னுரிமை தரிசனம் செய்வது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனி, திருச்செந்தூர், மருதமலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முக்கிய ஆன்மிக தலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர்.
இந்த நிலையில், சில கோயில்களில் உள்ளூர் அரசியல்வாதிகள், காவல் துறையினர், முக்கிய பிரமுகர்கள், ஓய்வுபெற்ற மற்றும் பணியில் உள்ள நீதித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிகார பலத்தை பயன்படுத்தி, விதிகளை மீறி குறுக்கு வழிகளில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால், முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களுக்கும், உயரதிகாரிகளுக்கும் தனியாக நேர அட்டவணை நிர்ணயித்து, அந்த நேரங்களில் மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்றும், விதிகளை மீறி நுழைய முயல்வோரைக் கட்டுப்படுத்த தேவையான அதிகாரமும், பாதுகாப்பும் கோயில் நிர்வாகத்தினருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலையிட்டு, சாதாரண பக்தர்களின் தரிசன உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.