சேலம் ஜருகுமலைப் பகுதிகளில் காட்டுத் தீ பரவல் – அடிவார கிராம மக்கள் பதற்றம்
சேலம் மாவட்டத்தில் உள்ள ஜருகுமலை மற்றும் நாம மலை பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ வேகமாக விரிவடைந்து வருவதால், மலையடிவாரத்தில் வசிக்கும் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.
கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ஜருகுமலை, நாம மலை உள்ளிட்ட பல மலைத்தொடர்கள் சூழ்ந்த பகுதியாக சேலம் மாவட்டம் விளங்குகிறது. சமீப நாட்களாக மழை மற்றும் பனிப்பொழிவு குறைந்ததன் விளைவாக, வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மலைப்பகுதிகளில் உள்ள செடிகள் மற்றும் கொடிகள் வறண்டு, எளிதில் தீப்பற்றும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில், ஜருகுமலை மற்றும் நாம மலை பகுதிகளில் சில சமூக விரோதிகள் தீ வைத்ததாக சந்தேகம் எழுந்துள்ளது. பலத்த காற்று வீசுவதால், தீ விரைவாக பரவி காட்டுத் தீயாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. தீயை கட்டுப்படுத்தும் பணியில் பொதுமக்களுடன் சேர்ந்து தீயணைப்பு துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காட்டுத் தீ குடியிருப்பு பகுதிகளை நோக்கி நகரும் அபாயம் இருப்பதால், மலையடிவாரத்தில் வசிக்கும் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளனர்.