டாஸ்மாக் பார் வளாகத்தில் தொழிலாளி உயிரிழப்பு – புகார் அளித்த பெண்களுக்கு போலீசார் முன்னிலையில் மிரட்டல்
மதுரையில் டாஸ்மாக் கடை இணைந்த பார் வளாகத்தில் ஒரு தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மதுக்கடையை அகற்ற வேண்டும் எனக் கோரிய பெண்களை காவல்துறையினர் முன்னிலையிலேயே பார் கட்டட உரிமையாளர் மிரட்டியதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாலா என்பவர், குடும்பப் பிரச்சினை காரணமாக மதுரை மாநகரின் முல்லைநகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
மது பழக்கத்துக்கு அடிமையான அவர், பி.பி.குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை வளாகத்திற்குள் அனுமதியின்றி நுழைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பின்னர், அந்த பார் பகுதியில் அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காலை நேரத்தில் கடையை திறந்த ஊழியர்கள் இதை கண்டறிந்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில், டாஸ்மாக் கடை காரணமாக அப்பகுதி மக்கள், குறிப்பாக பெண்கள் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதாகவும், மது அருந்திவரும் சிலர் வீடுகளின் முன்பு அட்டகாசம் செய்வதாகவும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
அந்த நேரத்தில், பார் கட்டடத்தின் உரிமையாளர் காவல்துறையினர் முன்னிலையிலேயே பெண்களை மிரட்டியதாக கூறப்படும் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.