பிரதமர் மோடியுடன் தொலைபேசி உரையாடல் – இந்திய பொருட்களுக்கான வரி 18% ஆக குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக இறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்து வந்த பரஸ்பர சுங்க வரி, இதுவரை இருந்த 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும், உலக அளவில் சக்தி வாய்ந்ததும் மரியாதைக்குரியதும் ஆன தலைவராக அவர் திகழ்வதாகவும் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்த உரையாடலின்போது, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள் மட்டுமின்றி, ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் அதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்தார்.
மேலும், இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை படிப்படியாகக் குறைத்து, அமெரிக்காவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதேபோல் வெனிசுலாவிலிருந்தும் எண்ணெய் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நடவடிக்கைகள், உக்ரைன் போரால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான முயற்சிகளுக்கு உதவும் எனவும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் மீது தன்னுக்கு உள்ள ஆழ்ந்த மரியாதை மற்றும் நட்பு காரணமாகவும், அவர் முன்வைத்த கோரிக்கையின்பேரிலும், இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் விளக்கமளித்தார்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்கா விதித்திருந்த 25 சதவீத பரஸ்பர சுங்க வரி இனி 18 சதவீதமாக குறையும் என்றும், அதே நேரத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரியை பூஜ்ஜிய நிலைக்கு குறைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
மேலும், அமெரிக்க பொருட்களை பெருமளவில் வாங்க இந்தியா உறுதியளித்துள்ளதாகக் கூறிய ட்ரம்ப், மொத்தம் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பொருட்களை இந்தியா வாங்கும் எனவும் தெரிவித்தார்.
இந்தியாவுடனான நட்பு உறவு மிகச் சிறப்பானதாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், எதிர்காலத்தில் இந்த நட்பு மேலும் வலுப்பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தானும் பிரதமர் மோடியும் “காரியங்களைச் செய்து முடிக்கும் தலைவர்கள்” என்றும் அவர் கூறினார்