திமுக ஆட்சிக்கு எதிராக தமிழக மக்கள் திரண்டுள்ளனர் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் நடைபெற்று வரும் திமுக அரசின் நிர்வாகத்திற்கு மாநில மக்கள் அனைவரும் எதிராக உள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை தி.நகரில் அமைந்துள்ள பாஜக தலைமையகம் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமீபத்தில் கட்சியில் பலருக்கு தேர்தல் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், சில ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிடுவது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் தற்போது நடைபெறும் ஆட்சி, அரசு ஊழியர்களையே ஏமாற்றும் அளவிற்கு மோசமான நிலைக்கு சென்றுள்ளதாகவும், இது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து வலுப்பெற்று வரும் சூழலில், திமுக அரசின் செயல்பாடுகளால் தமிழக மக்கள் முழுவதும் அந்த ஆட்சிக்கு எதிராக திரண்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், பிப்ரவரி 6ஆம் தேதி முதல் பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பிற்கான கருத்துக் கேட்பு வாகனம் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தார்.
அந்த வாகனத்தின் மூலம் பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புகள் மற்றும் ஆலோசனைகளை பதிவு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.