விஜயின் அரசியல் வருகையால் திமுக அச்சம் – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம்
தமிழகத்தில் தவெக தலைவர் விஜயின் அரசியல் நுழைவால் பாஜக அல்ல, ஆளும் திமுகதான் அதிகம் அச்சமடைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியின் போது, “தமிழக அரசியலில் விஜயின் வருகையால் பாஜக பயப்படுகிறதா?” என்ற கேள்வியை நெறியாளர் எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், விஜயை பார்த்து அச்சப்பட வேண்டிய நிலை பாஜகவிற்கு இல்லை என்றும், அவரது வருகை திமுகவையே கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.
ஒருபுறம் விஜயின் அரசியல் பிரவேசம், மறுபுறம் தேசிய ஜனநாயகக் கூட்டணி மாநிலத்தில் வலுப்பெற்று வருவது ஆகிய இரண்டும் திமுகவுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
இந்த அச்சத்தின் வெளிப்பாடாகவே திமுக தொடர்ந்து இலவச அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாக குற்றம்சாட்டிய நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதாகவும், இதற்கு முன் இல்லாத அளவுக்கு போதைப்பொருள் கலாசாரம் பரவி வருவதாகவும் கடுமையாக விமர்சித்தார்.