பில் கேட்ஸ் தொடர்பாக புதிய சர்ச்சை? – எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றதாக கூறப்படும் தகவல்கள்
அமெரிக்க நீதித்துறை வெளியிட்டு வரும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி, செல்வந்தர்களுக்கு பாலியல் விருந்தாக வழங்கியதாக குற்றச்சாட்டுக்குள்ளான தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன், கைது செய்யப்பட்ட நிலையில் சிறையிலேயே உயிரிழந்தார். அவரின் மரணத்திற்குப் பிறகு, அவர் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கட்டகட்டமாக பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சமீபத்தில் வெளியான சில ஆவணங்களில், பில் கேட்ஸ் குறித்து எப்ஸ்டீன் தனது தனிப்பட்ட மின்னஞ்சல்களில் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. அந்த பதிவுகளில், ரஷ்ய பெண்களுடன் ஏற்பட்டதாக கூறப்படும் தனிப்பட்ட தொடர்புகள் காரணமாக பில் கேட்ஸ் பால்வினை நோயால் பாதிக்கப்பட்டதாக எப்ஸ்டீன் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், இந்த விவகாரம் தனது மனைவிக்கு தெரியாமல் இருக்க, பில் கேட்ஸ் ரகசியமாக மருந்துகளை எடுத்துக் கொண்டதாகவும் அந்த மின்னஞ்சல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய குறிப்புகள் 2013ஆம் ஆண்டு எப்ஸ்டீன் தன்னிடமே அனுப்பிக்கொண்ட மின்னஞ்சல்களில் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் பில் கேட்ஸின் செய்தித் தொடர்பாளர் முழுமையாக மறுத்துள்ளார். எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் இடம்பெறும் தகவல்கள் ஆதாரமற்றவை என்றும், உண்மைக்கு மாறானவை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும் நிலையில், உலகளவில் முக்கிய பிரபலங்கள் குறித்து மேலும் சர்ச்சைகள் எழலாம் என அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.