மாமல்லபுரத்தில் சர்வதேச சுற்றுலா உச்சி மாநாடு – முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில், இரண்டு நாட்கள் நடைபெறும் சர்வதேச அளவிலான சுற்றுலா உச்சி மாநாட்டை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக, ரூ.22,794 கோடி மதிப்பிலான முதலீடுகளை உள்ளடக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் “தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு” மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டது. மாநாட்டை தொடங்கி வைத்த முதலமைச்சர், சுற்றுலா நிறுவனங்கள் அமைத்திருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, சுற்றுலா துறையில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில், முதலமைச்சர் முன்னிலையில் 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இம்மூலம் ரூ.22,794 கோடி அளவிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 65,937 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், சுற்றுலா வளர்ச்சிக்காக ரூ.40 கோடியே 25 லட்சம் மதிப்பில் நிறைவு பெற்ற பல்வேறு திட்டப்பணிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மாநாட்டில் உரையாற்றிய முதலமைச்சர், சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாகக் கூறினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் சுற்றுலா துறையின் வளர்ச்சிக்காக ரூ.612 கோடியே 18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மாமல்லபுரத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டு, ரூ.100 கோடி மதிப்பில் நவீன சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
இந்த சர்வதேச சுற்றுலா உச்சி மாநாடு, தமிழ்நாட்டை உலக சுற்றுலா வரைபடத்தில் முக்கிய இடத்தில் நிலைநிறுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.