எப்ஸ்டீன் ஆவணங்களில் பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ – சர்ச்சை புகைப்படங்கள் வெளியீடு
அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்கில் வெளியான புதிய நீதிமன்ற ஆவணங்கள், பிரிட்டன் அரச குடும்பத்தின் முன்னாள் உறுப்பினரான இளவரசர் ஆண்ட்ரூவை மீண்டும் பெரும் சர்ச்சையில் சிக்கவைத்துள்ளன.
அந்த ஆவணங்களில், தரையில் படுத்திருக்கும் ஒரு பெண்ணுடன் ஆண்ட்ரூ தகாத முறையில் இருப்பதை உணர்த்தும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படங்கள் வெளியாகியதும் சர்வதேச அளவில் அதிர்ச்சியும், கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
ஜெஃப்ரி எப்ஸ்டீன் மற்றும் இளவரசர் ஆண்ட்ரூ மீது, வர்ஜீனியா கியூஃப்ரே என்பவர் பாலியல் வன்முறை குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அந்த குற்றச்சாட்டுகள் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வர்ஜீனியா கியூஃப்ரே தற்கொலை செய்து கொண்டது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தன்னிடம் இருந்த அரச மரியாதை பட்டங்களையும் பொது பொறுப்புகளையும் துறப்பதாக இளவரசர் ஆண்ட்ரூ அறிவித்தார். இருப்பினும், அவர் விருப்பத்தின் பேரில் அல்லாமல், பிரிட்டன் அரச குடும்பத்தின் அழுத்தம் காரணமாகவே அந்த முடிவை எடுத்ததாக தகவல்கள் வெளியாகின. அதே நேரத்தில், தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளை ஆண்ட்ரூ முழுமையாக மறுத்து வந்தார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சமீபத்தில் எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டன. அதில் இடம்பெற்றுள்ள புதிய புகைப்படங்கள், ஆண்ட்ரூவுக்கு எதிரான சந்தேகங்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இதற்கு முன், கடந்த மாதம் வெளியான மற்றொரு ஆவணத் தொகுப்பிலும், ஐந்து பெண்களின் மடியில் இளவரசர் ஆண்ட்ரூ அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர்ச்சியான ஆவண வெளியீடுகளைத் தொடர்ந்து, இளவரசர் ஆண்ட்ரூ இந்த புகைப்படங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.