அரசியல் குற்றச்சாட்டுகள் உண்மைகளை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் – நிர்மலா சீதாராமன்
அரசியல் ரீதியான விமர்சனங்களை அரசு வரவேற்கிறது; ஆனால் அவை ஆதாரமான உண்மைகளின் மீது அமைந்திருக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் நாட்டின் முக்கியமான பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சனம் முன்வைத்திருந்தார். இந்த நிலையில், அவரது கருத்துகளுக்கு டெல்லியில் பதிலளித்த நிர்மலா சீதாராமன், ராகுல் காந்தி குறிப்பிடும் எந்த வகையான திருத்தங்கள் அல்லது குறைகள் குறித்து அவர் பேசுகிறார் என்பது தெளிவாக இல்லை என கூறினார்.
மேலும், இந்திய பொருளாதாரத்தின் அடித்தளங்கள் வலுவாக உள்ளதாகவும், தற்போதைய நிலைமை உறுதியான வளர்ச்சிப் பாதையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், ஜவுளி மற்றும் தோல் தொழில் துறைகள், விவசாயம் சார்ந்த தொழில் முனைவோர், சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் விமர்சனங்கள் ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், அவை நிச்சயமாக உண்மை தகவல்களை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.