தைப்பூச திருநாள் – பாஜக தலைவர்கள் நயினார் நாகேந்திரன், எல்.முருகன், அண்ணாமலை வாழ்த்து
தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை ஆகியோர் தனித்தனியாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
பக்தி மற்றும் பொறுமை துணையாகவும், அன்பும் அறமும் வழிகாட்டியாகவும் இருந்து, தாய் மடியில் அடைக்கலம் புகும் குழந்தையைப் போல எங்களை காத்தருளி, சோதனை காலங்களில் துணை நின்று, வெற்றியின் பாதையை காட்டி, தங்கள் அருளால் எங்கள் வாழ்க்கை முழுவதும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் நிரம்பச் செய்யுமாறு முருகப் பெருமானை மனமார வேண்டிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தற்போதைய தமிழக அரசியல் சூழலில் நிலவும் இருள் அகன்று, விடியா திமுக ஆட்சி முடிவுக்கு வர அருள் புரிய வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேபோல், தமிழர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்த தைப்பூசத் திருநாளுக்கு அரசு விடுமுறை வழங்கும் தீர்மானத்தை, கடந்த ஆட்சியில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி நிறைவேற்றியதற்காக, இந்நேரத்தில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது வாழ்த்து பதிவில்,
“கல் தோன்றி மண் தோன்றும் காலத்துக்கும் முன்பே தோன்றிய முதன்மையான தமிழ்க் குடியின் ஆதிக் கடவுளாக நாம் வணங்கும் அருள்மிகு முருகப் பெருமானுக்கு உரிய புனித நாளான தைப்பூசத் திருநாள், உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு நல்வாழ்த்துகளை வழங்கும் மகத்தான நாளாகும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழக பாஜக சார்பில் நடத்தப்பட்ட ‘வேல் யாத்திரை’ இயக்கத்தின் போது, தைப்பூசத் திருநாளுக்கு அரசு விடுமுறை கிடைக்கச் செய்ததில் பெருமை அடைகிறோம் என்றும், அனைவருக்கும் அவர்கள் விரும்பும் நற்காரியங்கள் நிறைவேறி, சகல நலன்களுடன் முருகப் பெருமானின் அருள் கிடைக்க வேண்டும் எனவும் அவர் வாழ்த்தியுள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தமிழக மக்களுக்கு அனைவருக்கும் இனிய தைப்பூசத் திருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
மேலும், ஆன்மீக உணர்வு இல்லாமல் சமூக மாற்றம் நிகழ முடியாது என்றும், அநீதியை எதிர்க்கும் துணிச்சலும், தர்மத்தை பாதுகாக்கும் உறுதியும் இந்த புனித நாள் நம் அனைவருக்கும் அளிக்க வேண்டும் என்றும், அனைவரின் வாழ்விலும் அன்பும் ஆனந்தமும் நிறைந்திட முருகப் பெருமானை பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.