புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு கோலாகலம் – வேகமாக பாய்ந்த காளைகள்
புதுக்கோட்டை மாவட்டம் காட்டுப்பட்டி கிராமத்தில், கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.
காட்டுப்பட்டியில் அமைந்துள்ள முனீஸ்வரர் கோயிலின் பொங்கல் விழாவை ஒட்டி இந்த பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்தப் போட்டியில் புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 650 காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். போட்டியை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
பின்னர், வாடிவாசல் வழியாக அதிவேகமாக வெளியேறிய காளைகளை வீரர்கள் துணிச்சலுடன் போட்டி போட்டு அடக்கினர். காளைகளை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய வீரர்களுக்கும், வீரர்களின் பிடியிலிருந்து தப்பித்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.