தரமற்ற உணவுக்கு எதிர்ப்பு – தனியார் கல்லூரி மாணவர்கள் இரவு முழுவதும் போராட்டம்!
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில், விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவுக்கு எதிராக மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமாரபாளையத்தில் உள்ள எக்ஸல் கல்லூரியில், தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் தங்கி படித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதியில் வழங்கப்பட்ட உணவு மிகவும் மோசமான தரத்தில் இருந்ததாகவும், அதை உட்கொண்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி, மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது, சில மாணவர்கள் கல்லூரி கட்டடத்தின் கண்ணாடிகளை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க கல்லூரி வளாகத்தில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம், மாணவர் பாதுகாப்பு மற்றும் விடுதி வசதிகள் தொடர்பாக கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.