தென் ஆப்பிரிக்காவுக்கு 277 ரன்கள் இலக்கு
பாகிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லாகூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 378 ரன்கள் குவித்தது.
இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி, 2-வது நாள் முடிவில் 67 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்பில் 216 ரன்கள் எடுத்தது. டோனி டி ஸோர்ஸி 81 ரன்களுடன், செனுரன் முத்துசாமி 6 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
3-வது நாள் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி 84 ஓவர்களில் 269 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. டோனி டி ஸோர்ஸி தனது 2-வது சதத்தை 171 பந்துகளில் 2 சிக்ஸ்கள், 10 பவுண்டரிகளுடன் 104 ரன்கள் செய்து அடைந்தார். நோமன் அலி பந்தில் செனுரன் முத்துசாமி 11, பிரேனலன் சுப்ராயன் 4, காகிசோ ரபாடா 0 ரன்களில் வெளியேறினர்.
பாகிஸ்தான் அணியில் நோமன் அலி 6, சஜித் கான் 3 விக்கெட்கள் வீழ்த்தினர். இரண்டாம் இன்னிங்ஸில் 109 ரன்கள் முன்னிலையில் பாகிஸ்தான் அணி 46.1 ஓவர்களில் 167 ரன்கள் எடுத்து சுருண்டது. அதிகபட்சமாக பாபர் அஸம் 42, அப்துல்லா ஷபிக் 41, சவுத் ஷகீல் 38 ரன்கள் குவித்தனர். தென் ஆப்பிரிக்க அணி சார்பில் செனுரன் முத்துசாமி 5, சைமன் ஹார்மர் 4 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதையடுத்து, 277 ரன்கள் இலக்குடன் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 3-வது நாள் முடிவில் 22 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்பில் 51 ரன்கள் எடுத்துள்ளது. எய்டன் மார்க்ரம் 3, வியான் முல்டர் 0 ரன்களில் நோமன் அலி பந்தில் வெளியேறினர். ரியான் ரிக்கெல்டன் 29, டோனி டி ஸோர்ஸி 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு இன்னும் 226 ரன்கள் தேவை, மற்றும் 8 விக்கெட்கள் கைவசம் உள்ள நிலையில், இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.
லாகூர் மைதானத்தில் இதற்கு முன்னர் வெற்றி பெற அதிகபட்ச இலக்கு 208 ரன்கள் மட்டுமே. 1961-ல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்த இலக்கை துரத்தி வெற்றி கண்டது. தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் போது, இந்த மைதானத்தில் அதிக ரன்கள் இலக்கை எட்டிய அணி என்ற சாதனையை நிகழ்த்தும்.