மக்கள் மாளிகையில் கம்பர் சிலை திறப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
சென்னை கிண்டி பகுதியில் அமைந்துள்ள மக்கள் மாளிகை வளாகத்தில், தமிழின் பெரும் காவியக் கவிஞர் கம்பரின் திருவுருவச் சிலையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.
இதற்கு முன்பு, 2022ஆம் ஆண்டு மக்கள் மாளிகையில் பாரதியாரின் சிலையை திறந்து வைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, 2023ஆம் ஆண்டில் அங்கு அமைந்திருந்த தர்பார் மண்டபத்திற்கு ‘பாரதியார் மண்டபம்’ எனப் பெயர் மாற்றம் செய்திருந்தார்.
அதே ஆண்டில் ராமலிங்க அடிகளாரின் சிலையையும் அவர் திறந்து வைத்த நிலையில், தற்போது கம்பர் வனம் பூங்கா அருகே நிறுவப்பட்டுள்ள கம்பர் சிலையை அவர் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். கம்பரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய ஆளுநர், தமிழின் பாரம்பரியத்திற்கு தனது மரியாதையை வெளிப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஹெச்.வி.ஹண்டே, கம்பராமாயண நூலை ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.
மேலும், நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும், ஆளுநர் தமிழில் கையெழுத்திட்ட கம்பராமாயண நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.