நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை இழிவுபடுத்தும் பதிவுகள் அகற்றம் – காவல்துறை உயர்நீதிமன்றத்தில் உறுதி
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தவறாக சித்தரிக்கும் புத்தகத்தின் விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என வேலூரைச் சேர்ந்த நவீன் பிரசாத் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நீதிபதியை அவமதிக்கும் உள்ளடக்கத்துடன் வெளியிடப்பட்ட புத்தகத்தை பறிமுதல் செய்யவும், புத்தகக் கண்காட்சிகளில் அந்த நூல் இடம் பெறாததை உறுதி செய்யவும் காவல்துறைக்கு உத்தரவிட்டது.
வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 7ம் தேதி தொடங்கிய புத்தகக் கண்காட்சியில், குறிப்பாக கீழைக்காற்று பதிப்பகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த இரண்டு அரங்குகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சோதனையின் போது சர்ச்சைக்குரிய எந்த புத்தகமும் விற்பனை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மேலும், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் கடந்த ஜனவரி 1ம் தேதி கீழைக்காற்று பதிப்பகம் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்த பதிவுகள், கேலிச்சித்திரங்கள் உள்ளிட்ட அனைத்து உள்ளடக்கங்களும் நீக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இனி வரும் காலங்களில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்து அவதூறு பரப்பும் எந்தவொரு புத்தகமும் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டால், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.