ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்தால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் : இபிஎஸ் அறிவிப்பு
அதிமுக ஆட்சி மீண்டும் வரையுடன், ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிரிழக்கும் வீரர்களின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு தொடக்க நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாகும் என்றும், இது வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் அற்புதமான விளையாட்டு என்றும் கூறினார்.
மேலும், கலாச்சார அடையாள விளையாட்டான ஜல்லிக்கட்டு தொடங்குவதில் பெருமை அடைகிறோம் என்றும், அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் ஜல்லிக்கட்டு வீரர்கள் பலியானால் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படும் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் உறுதிசெய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.