சட்டமன்றத் தேர்தல்: திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் மக்கள் நீதி மய்யம்
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி தங்களுக்கு 12 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் எனக் கோரி பட்டியலை தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் அறிவிப்பு நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, விருப்ப மனு பெறுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அதன் சின்னமான டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகளை கேட்டுப் பெறுவது என்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்கு வங்கி அதிகமாக உள்ளதாக கருதப்படும் 12 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், இதில் கோவை தெற்கு, சென்னை மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள சில தொகுதிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், டார்ச் லைட் சின்னத்தில்தான் மக்கள் நீதி மய்யம் போட்டியிட வேண்டும் என்பதில் கமல்ஹாசன் தெளிவாக இருப்பதாகவும், கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.