வர்த்தக உடன்படிக்கைகள் மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் – பிரதமர் மோடி
இந்தியா பல்வேறு நாடுகளுடன் மேற்கொண்டு வரும் வர்த்தக ஒப்பந்தங்கள், இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ரோஜ்கார் மேளா திட்டத்தின் கீழ், 61 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களுக்கு காணொலி மூலம் பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி வழங்கினார்.
அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகவும், உலகின் 100-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியா உலக நாடுகளுடன் கையெழுத்திட்டுள்ள வர்த்தக உடன்படிக்கைகள், சர்வதேச அளவில் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
அரசுத் துறையில் பணிபுரிபவர்கள் தங்களை மக்களுக்குச் சேவை செய்யும் பணியாளர்களாகவே கருத வேண்டும் என வலியுறுத்திய பிரதமர்,
“மக்களே கடவுள்” என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இதே திட்டத்தின் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டத்தில் ரோஜ்கார் மேளா மூலம் 148 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இதனை மத்திய இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் வழங்கினார்.
மத்திய அரசின் ரோஜ்கார் மேளா திட்டத்தின் வாயிலாக ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரோஜ்கார் மேளாவின் 8-வது கட்ட நிகழ்ச்சி நாடு முழுவதும் 45 இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக, சிவகங்கை அருகே உள்ள இலுப்பக்குடி பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் பங்கேற்று, 148 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.