ஜனநாயகன் திரைப்பட தணிக்கை வழக்கில் 27ஆம் தேதி தீர்ப்பு – சென்னை உயர்நீதிமன்ற அறிவிப்பு
ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், வரும் 27ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் மேல்முறையீட்டு விசாரணை கடந்த 20ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, தணிக்கை வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், திரைப்படத்தை மறுதணிக்கை செய்ய தயாரிப்பு நிறுவனத்தை அணுகியதாகவும், அந்த மறுதணிக்கை செயல்முறைக்காக கூடுதலாக 20 நாட்கள் அவகாசம் தேவைப்படுவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், தங்களது தரப்பில் சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும், வழக்கு தொடரப்படாமல் இருந்திருந்தால் இதற்குள் திரைப்படம் வெளியாகியிருக்கும் என்றும் தணிக்கை வாரியத்தின் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பு வழக்கறிஞர், மறுதணிக்கை தொடர்பாக தணிக்கை வாரியம் முறையாக அணுகவில்லை என்றும், டிசம்பர் 29ஆம் தேதிக்கு பிறகு அனைத்து தகவல்களும் தங்களிடம் இருந்து மறைக்கப்பட்டதாகவும் கூறினார். மேலும், தணிக்கைச் செயல்முறையில் வெளிப்படைத்தன்மை இல்லாதது விதிமீறலாகவே கருதப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இரு தரப்பின் வாதங்களும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில், வரும் 27ஆம் தேதி காலை 10.30 மணிக்கு இந்த வழக்கு முதன்மை வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.