ஒப்பந்தம் முடிந்தபின்பும் காலியிட மறுத்த டாஸ்மாக் கடை – முன்பு அமர்ந்து பெண் நடத்திய வித்தியாசமான போராட்டம்
சென்னை திருவான்மியூர் அருகே, வாடகை ஒப்பந்தம் காலாவதியான பின்னரும் இடத்தை காலி செய்ய மறுத்த டாஸ்மாக் எலைட் மதுபான கடைக்கு எதிராக, கட்டட உரிமையாளர் ஒருவர் நூதனமான முறையில் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சென்னை ஈ.சி.ஆர் சாலையில், திருவான்மியூர் ஆர்.டி.ஓ அலுவலகம் எதிரே அமைந்துள்ள, சுகந்தி என்பவருக்குச் சொந்தமான மூன்று மாடி கட்டடத்தின் தரை தளம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் எலைட் கடை நடத்துவதற்காக வாடகைக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பே வாடகை ஒப்பந்தம் நிறைவடைந்திருந்த போதும், கடையை காலி செய்யுமாறு அவர் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.
ஆனால், டாஸ்மாக் எலைட் கடை நிர்வாகம் இடத்தை காலி செய்யாததால், சுகந்தி அந்த கடையின் முன்பாக கட்டட கழிவுகளை கொட்டி, அதன் மேல் அமர்ந்து வித்தியாசமான போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்து வந்த போலீசார், அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி, காவல் நிலையத்தில் உத்தியோகபூர்வ புகார் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். இதையடுத்து, அவர் தனது போராட்டத்தை நிறுத்தி, காவல் நிலையத்தில் புகார் மனுவை பதிவு செய்தார்.