காதல் விவகாரம் – காவல்நிலையம் முன்பே இளம்பெண்ணை காரில் அழைத்துச் செல்ல முயன்ற உறவினர்கள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, காவல்நிலையத்திற்கு வந்த இளம்பெண்ணை, போலீசார் கண்முன்னே அவரது உறவினர்கள் காரில் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உச்சிமலைக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் மற்றும் ஆனந்தி கடந்த நான்கு ஆண்டுகளாக காதல் உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், இருவரும் கடந்த 21ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், பாச்சல் காவல்துறையினர் காதலர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர்.
அதன்படி, காதலர் மதன்குமாருடன் காவல்நிலையத்திற்கு வந்த ஆனந்தியை, அவரது உறவினர்கள் திடீரென காரில் ஏற்றி அழைத்துச் செல்ல முயன்றனர்.
இந்த காட்சியை கவனித்த போலீசார், உடனடியாக தலையிட்டு கடத்தல் முயற்சியை தடுத்து, இளம்பெண்ணை பாதுகாப்பாக மீட்டனர். அச்சமயத்தில், தங்களுடன் திரும்பி வருமாறு பெற்றோர் உணர்ச்சி வசப்பட்டு அழுததாக கூறப்படுகிறது.
இறுதியில், தற்போது பெற்றோருடன் செல்வதாக அந்த இளம்பெண் போலீசாரிடம் தெரிவித்தார். இதையடுத்து, தேவையான உறுதிமொழி எழுதி வாங்கிய காவல்துறையினர், இருவரையும் அவரவர் பெற்றோர்களுடன் அனுப்பி வைத்தனர்.