ஆடிட்டர் குருமூர்த்தியுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆலோசனை – அரசியல் வட்டாரத்தில் கவனம்
மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், சென்னை காட்டாங்குளத்தூரில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தரை நேரில் சந்தித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார்.
சென்னை காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள SRM கல்வி வளாகத்திற்கு பியூஷ் கோயல் வருகை தந்தார். அங்கு அவர், இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் பாரிவேந்தரை சந்தித்தார். சந்திப்பின் போது இருவரும் தேநீர் அருந்தியபடி அரசியல் நிலவரம் குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்தனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) தொடர்ந்து இருப்பதாக பாரிவேந்தர் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதற்கிடையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தியின் இல்லத்திற்கும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்றார். அங்கு அவருடன் நேரில் சந்தித்து, தற்போதைய தமிழக அரசியல் சூழல், தேர்தல் நிலவரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்புக்கு பின்னர், பியூஷ் கோயல் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த தொடர் சந்திப்புகள் தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை பெற்றுள்ளன.