4 வயது சிறுமியை பாலியல் கொடுமை செய்து கொலை செய்த தாயின் நண்பர் கைது
திருச்செந்தூர் அருகே 4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொடூரமாக உயிரிழக்கச் செய்த சம்பவத்தில், அந்த குழந்தையின் தாயுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இருளப்பபுரம் பகுதியைச் சேர்ந்த சத்தியா என்பவர், தனது இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து, குலசேகரன்பட்டினத்தில் தனது 4 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
இந்த சூழலில், தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த இசக்கிராஜ் என்பவருடன் சத்தியாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் உடன்குடி அருகே உள்ள செட்டியாபத்து பகுதியில் ஒன்றாக வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
இரண்டு நாட்களுக்கு முன்பு, குழந்தையை விஷவண்டு கடித்ததாக கூறி, இருவரும் சிறுமியை உடன்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பதை கவனித்த மருத்துவர்கள் சந்தேகம் அடைந்து, உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட உடற்கூராய்வில், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தது உறுதியாகியது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்ற இசக்கிராஜாவை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், போக்சோ உள்ளிட்ட கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.