மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணியில் முன்னுரிமை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறப்பாக செயல்படும் மாடுபிடி வீரர்களுக்கு கால்நடை பராமரிப்பு துறையில் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், ஜல்லிக்கட்டு காளைகளுக்காக தனிப்பட்ட சிகிச்சை மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தப்படும் பாரம்பரிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, இந்த ஆண்டும் உற்சாகமாக நடைபெற்றது. போட்டியை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வை காண முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வருகை தந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகள் அவருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி வரவேற்றனர்.
போட்டி மேடையில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு உள்ளிட்டோருடன் அமர்ந்த முதல்வர், ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை ரசித்ததோடு, இரண்டு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
அதன்படி, திறமைமிக்க மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கென பயிற்சி மற்றும் மருத்துவ வசதிகள் கொண்ட சிறப்பு மையம் உருவாக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.