“வங்கதேசத்திற்கு எதிராகவும் ஆபரேஷன் சிந்தூர் பாணி நடவடிக்கை மேற்கொள்ளலாம்” – இந்திய நடவடிக்கையை அஞ்சி நடுங்கும் பாகிஸ்தான் அரசியல் விமர்சகர் நஜாம் சேதி
இந்தியா, பாகிஸ்தான் மீது மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் தாக்கம் இன்னமும் அந்நாட்டின் அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களில் எதிரொலித்து வரும் நிலையில், தற்போது வங்கதேசத்தை குறித்தும் இந்தியா இதேபோன்ற நடவடிக்கையை எடுக்கக்கூடும் என்ற அச்சம் பாகிஸ்தானில் வெளிப்படையாக வெளிக்கொணரப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் மூத்த அரசியல் விமர்சகரும், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் நெருங்கிய ஆலோசகருமான நஜாம் சேதி, சமீபத்தில் ஊடகமொன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும் போது, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நினைவுகூர்ந்து, வங்கதேசத்திற்கு எதிராகவும் இதேபோன்ற ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என கருத்து தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஜம்மு–காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், அப்பாவி சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் இந்தியாவை கடும் அதிர்ச்சிக்கும் கோபத்திற்கும் உள்ளாக்கியது. இதனையடுத்து, இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானின் எல்லைக்குள் செயல்பட்ட பயங்கரவாத முகாம்களை குறிவைத்து துல்லியமான தாக்குதல்களை நடத்தியது.
இந்த நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பல பயங்கரவாத தளங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும், பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகள் பெரும் இழப்பை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இருப்பினும், போர் வென்றது போல் பாகிஸ்தான் தன்னை உலகளவில் காட்டிக்கொள்ள முயற்சி செய்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்தச் சூழலில், முகமது யூனுஸ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசு, பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருவது இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளதாக நஜாம் சேதி குறிப்பிட்டார். இந்தியா வங்கதேசத்தின் நடவடிக்கைகளையும் கருத்துக்களையும் எளிதில் புறக்கணிக்காது என்றும், தன்னை ஒரு பெரிய பிராந்திய சக்தியாக நிலைநிறுத்த வேண்டும் என்ற எண்ணம் இந்தியாவில் வலுவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், அதனை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில், வங்கதேசத்திற்கு எதிராகவும் ஆபரேஷன் சிந்தூர் பாணியிலான கடுமையான நடவடிக்கையை இந்தியா மேற்கொள்ளக்கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்தியாவின் ராணுவ மற்றும் அரசியல் முடிவுகள் எதிர்பாராத வகையில் இருக்கக்கூடும் என்பதால், அண்டை நாடுகள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் நினைவே பாகிஸ்தான் அரசியல் விமர்சகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருப்பது தற்போது தெளிவாக வெளிப்பட்டுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, நஜாம் சேதி போன்ற மூத்த அரசியல் விமர்சகர் வெளிப்படையாக இந்த அச்சத்தை வெளிப்படுத்தியிருப்பது, இந்தியாவின் நடவடிக்கைகள் பாகிஸ்தானை எவ்வளவு அளவிற்கு நடுங்க வைத்துள்ளன என்பதற்கான சான்றாக பார்க்கப்படுகிறது.
இந்த விவகாரம் தென் ஆசிய அரசியல் சூழலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியாவின் அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து சர்வதேச அளவிலும் கவனம் திரும்பியுள்ளது.