ஈரானில் படுகொலை செய்யப்பட்ட மாணவி ரூபினா – இளைஞர் எழுச்சியின் சின்னமாக மாறிய மரணம்
ஈரானில் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்தின் போது, ரூபினா அமினியன் என்ற இளம் கல்லூரி மாணவி, புரட்சிகர பாதுகாப்புப் படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இன்று அவர், ஈரானிய இளைஞர் புரட்சியின் அடையாளமாக பார்க்கப்படுகிறார். இந்த இளம்பெண்ணின் உயிரை பறித்த அந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதைக் காணலாம்.
கடந்த மாதம், கடும் பணவீக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வணிகர்கள் ஆரம்பித்த எதிர்ப்பு இயக்கம், பின்னர் மாணவர் போராட்டமாக மாறியது. இதனைத் தொடர்ந்து, ஈரானின் முக்கிய பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்கள் அரசுக்கு எதிராக தெருக்களில் இறங்கி போராடத் தொடங்கினர்.
13 நாட்களுக்கு மேலாக, ஈரானின் அனைத்து மாகாணங்களிலும் சுமார் 200-க்கும் அதிகமான நகரங்களில் இந்த போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போராட்டங்களை அடக்குவதற்காக அரசு கடுமையான வன்முறையைப் பயன்படுத்தி வருகிறது. ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படைகள், எதிர்ப்பில் ஈடுபடும் இளைஞர்களை கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளுகின்றன.
இதுவரை 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 10,000-க்கும் அதிகமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இரத்தப் பெருக்கை வெளி உலகம் அறியாமல் மறைப்பதற்காக, அரசு நாடு முழுவதும் மின்சாரம் துண்டித்து, இணைய மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளையும் நிறுத்தியுள்ளது.
18 முதல் 22 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், தலை அல்லது கழுத்துப் பகுதியில் குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில், ஈரானின் பல மருத்துவமனைகள் சடலங்களாலும், உயிருக்கு போராடும் காயமடைந்தவர்களாலும் நிரம்பி வழிகின்றன. காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் பல இளைஞர்கள் இரு கண்களையும் இழந்துள்ளனர். சிலர் ஒரு கண்ணை இழந்துள்ளனர். இதனால், கண் மருத்துவமனைகள் கடும் சுமையை எதிர்கொண்டு வருகின்றன.
இந்த கொடூர சூழலில், குர்திஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த மரிவான் நகரில் பிறந்த ரூபினா அமினியன் என்ற 23 வயது மாணவி, தெஹ்ரானில் உள்ள ஷரியதி தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மகளிர் கல்லூரியில் ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்புத் துறையில் ஃபேஷன் படித்து வந்தார்.
போராட்டங்களில் பங்கேற்பதற்காக, கடந்த 8ஆம் தேதி தனது கல்லூரியிலிருந்து வெளியே சென்ற ரூபினா, அதன்பின் மீண்டும் திரும்பவே இல்லை. பாதுகாப்புப் படையினர், மிக அருகிலிருந்து அவரது தலையில் சுட்டு, உயிரை பறித்துள்ளனர்.
மகளின் மரணச் செய்தியை அறிந்து, கெர்மன்ஷாவிலிருந்து தெஹ்ரானுக்கு வந்த அவரது குடும்பத்தினர், அவரது உடலை பெறுவதற்காக கடும் சிரமங்களை எதிர்கொண்டனர். ரூபினா பயின்ற கல்லூரிக்கு அருகிலுள்ள இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரது தாய், அங்கு போராட்டங்களில் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்களின் உடல்களை கண்டதாக கண்ணீருடன் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் ரூபினாவின் உடலை அடையாளம் காண குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர், உடலை தங்களுடன் எடுத்துச் செல்லவும் தடையிடப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பிறகு, உடலை கெர்மன்ஷாவிற்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால் அங்கு சென்றதும், ரூபினாவின் வீடு உளவுத்துறை அதிகாரிகளாலும் பாதுகாப்புப் படையினராலும் சூழப்பட்டிருந்தது. குடும்ப மரபுப்படி இறுதிச் சடங்குகளை நடத்தவும் அனுமதி வழங்கப்படவில்லை. முறையான கல்லறையில் புதைக்கவும் மறுக்கப்பட்டு, நகரத்திற்கு வெளியே உள்ள சாலையோரத்தில் உடலை புதைக்க கட்டாயப்படுத்தப்பட்டனர்.
மேலும், துக்க அனுசரிப்பு நிகழ்ச்சி நடத்த அருகிலுள்ள மசூதிகளை அணுகியபோது, அதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. இது மனித உரிமைகளுக்கும், கலாச்சார மற்றும் மத மரபுகளுக்கும் நேரடியான மீறலாகக் கருதப்படுகிறது.
ரூபினா தலையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பதை ஈரான் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகளும், அவர் மிக அருகிலிருந்து சுடப்பட்டதாகவும், குண்டு நேரடியாக தலையில் பாய்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கொலை குறித்து ஹானா மனித உரிமைகள் அமைப்பும் விசாரணையை தொடங்கியுள்ளது.
பெண்களின் உரிமைகளுக்காக போராடிய, சுதந்திரத்தை நேசித்த, தைரியமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஒரு இளம் கல்லூரி மாணவி, இன்று உயிரோடு இல்லை. வாழ்க்கையை நேசித்த, ஃபேஷன் மற்றும் ஆடை வடிவமைப்பில் கனவுகள் கொண்ட அந்த இளம்பெண்ணின் வண்ணமயமான எதிர்காலம், ஈரானின் அடக்குமுறை அரசால் நசுக்கப்பட்டுள்ளது.
இன்று, ஈரானின் சர்வாதிகார இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக போராடும் இளைஞர்களுக்கு, ரூபினா அமினியன் ஒரு போராட்டச் சின்னமாக மாறியுள்ளார். உலகின் பல நாடுகளில் சாதாரணமாக அனுபவிக்கப்படும் சுதந்திரத்திற்காக, ஈரான் இளைஞர்கள் எவ்வளவு கொடிய விலையை செலுத்துகிறார்கள் என்பதை நினைவூட்டும் அடையாளமாக அவர் நிற்கிறார்.
இதுவே, இன்றைய ஈரானின் நிலை.
சுதந்திரத்திற்காக இளைஞர்கள் கொடுக்கும் விலை – இதுதான்.