சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் டெட் தேர்ச்சி இன்றி ஆசிரியர் நியமனத்திற்கு அரசு அனுமதி
சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியமர டெட் (Teacher Eligibility Test) தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களையும் நியமிக்க அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தொடக்கக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு மானியம் பெறும் சிறுபான்மை தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், 2023 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்த 154 ஆசிரியர்களின் நியமனம், டெட் தேர்ச்சி அவசியம் என்ற விதியின் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் அல்ல என்றும், டெட் தேர்ச்சி இல்லாதது குற்றமாக கருத முடியாது என்றும் தீர்ப்பளித்தது.
இந்த நீதிமன்றத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, டெட் தேர்ச்சி பெறாதவர்களையும் சிறுபான்மை பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்க அனுமதிக்கும் அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி, அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் 316 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 154 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 470 ஆசிரியர்களை, அவர்களின் கல்வித் தகுதி உண்மைத்தன்மையை உறுதி செய்த பிறகு பணியில் தொடர அனுமதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எந்தவித முறைகேடும் ஏற்படாத வகையில் 154 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஒப்புதல் வழங்க வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்