சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விலை உயர்வு – புதிய கலால் வரி சட்டம் பிப்ரவரி 1 முதல் நடைமுறை
சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்தும் புதிய மத்திய கலால் வரி சட்டத்திருத்தம், வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய கலால் வரி திருத்த மசோதா முன்வைக்கப்பட்டு, விவாதத்திற்குப் பின் அங்கீகாரம் பெறப்பட்டது. தற்போது நாட்டில் சிகரெட்டுகளின் வகை மற்றும் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு, ஆயிரம் சிகரெட்டுகளுக்கு 200 ரூபாய் முதல் 735 ரூபாய் வரை வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த முறையை மாற்றி, ஆயிரம் சிகரெட்டுகளுக்கு விதிக்கப்படும் கலால் வரியை 2,050 ரூபாயிலிருந்து 8,500 ரூபாய் வரை உயர்த்தும் வகையில் புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த வரி உயர்வின் காரணமாக, இதுவரை 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிகரெட், இனி சுமார் 72 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மெல்லும் புகையிலைக்கு விதிக்கப்பட்ட வரி 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளதுடன், ஹுக்கா புகையிலைக்கு 40 சதவீதம் வரி விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய வரி நடைமுறைக்கு வந்தால், இந்தியாவில் சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் பயன்பாடு கணிசமாக குறையும் என சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.