சபரிமலை தங்கத் தகடுகள் மாயம்: திண்டுக்கல் நிதி நிறுவனத்தில் கேரள SIT விசாரணை
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிகழ்ந்த தங்கத் தகடுகள் திருட்டு தொடர்பான வழக்கில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் அலுவலகத்தில் கேரள சிறப்பு விசாரணைக் குழு (SIT) போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகளில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 4 கிலோ எடையுள்ள தங்கத் தகடுகள் காணாமல் போனதைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து கேரள அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் இடைத்தரகர் உன்னிகிருஷ்ணன், தேவசம் போர்டு துணை ஆணையர் முராரி பாபு, செயலாளர் ஜெயஸ்ரீ உள்ளிட்ட மொத்தம் 9 அதிகாரிகள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, தேவசம் வாரியத்தின் முன்னாள் நிர்வாக அதிகாரியான எஸ்.சிவகுமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நகை வியாபாரியிடம் 400 கிராம் தங்கம் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
இந்த தகவலின் அடிப்படையில் பல்லாரியில் சோதனை நடத்திய SIT போலீசார், நகை வியாபாரி கோவர்தன் மற்றும் அவருடன் தொடர்புடைய மேலும் ஒருவரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலை தொடர்ந்து, திண்டுக்கல் ராம்நகர் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வரும் பாலசுப்பிரமணியன் என்பவரின் அலுவலகத்தில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை மற்றும் சோதனை மேற்கொண்டனர்.