17 ஆண்டுகளுக்குப் பின் வங்கதேசம் வந்தடைந்த தாரிக் ரஹ்மான் – உற்சாகத்தில் ஆதரவாளர்கள்
வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் மகனும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் செயல் பொறுப்பாளருமான தாரிக் ரஹ்மான், 17 ஆண்டுகளுக்குப் பிறகு தமது தாய்நாட்டுக்கு மீண்டும் வருகை தந்துள்ளார். அவரது வருகையையொட்டி, கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெரும் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.
வங்கதேசத்தில் விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான கலீதா ஜியா நீண்ட காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஷேக் ஹசீனா ஆட்சிக் காலத்தில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளின் காரணமாக, தாரிக் ரஹ்மான் நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் வசித்து வந்தார். தற்போது அந்த வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வங்கதேசம் திரும்பியுள்ளார்.
மனைவி மற்றும் மகளுடன் லண்டனிலிருந்து விமானம் மூலம் டாக்கா வந்தடைந்த தாரிக் ரஹ்மானை வரவேற்க, நாட்டின் பல பகுதிகளிலிருந்து கட்சித் தொண்டர்கள் பேரணியாக விமான நிலையத்துக்கு வந்தனர். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், பாதுகாப்பு கருதி குண்டு துளைக்காத பேருந்தில் அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இந்தப் பயணத்தின் போது, சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த தொண்டர்கள் கோஷமெழுப்பி வரவேற்பு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, டாக்கா பூர்பச்சல் பகுதியில் கூடியிருந்த பெரும் கூட்டத்தினரிடையே உரையாற்றிய தாரிக் ரஹ்மான், 1971ஆம் ஆண்டு தனது முன்னோர்கள் சுதந்திரத்திற்காக போராடியதைப் போல, 2024ஆம் ஆண்டில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கப் போராடியதாக கூறினார்.
மேலும், அமெரிக்க தலைவர் மார்ட்டின் லூதர் கிங்கின் புகழ்பெற்ற உரையை நினைவூட்டும் வகையில், வங்கதேசத்தை மறுமலர்ச்சி அடையச் செய்யும் ஒரு தெளிவான திட்டம் தன்னிடம் இருப்பதாக அவர் அறிவித்தார். மதம் மற்றும் இன வேறுபாடுகளைக் கடந்து, அனைவரும் பாதுகாப்பாகவும் அமைதியாகவும் வாழக்கூடிய தேசத்தை உருவாக்குவதே தனது நோக்கம் எனவும் அவர் உறுதியளித்தார்.