ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து – நான்காம் நாள் விழா கோலாகலம்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் உள்ள புகழ்பெற்ற அரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெறும் பகல் பத்து திருவிழா கடந்த 20ஆம் தேதி சிறப்பாக தொடங்கியது.
இந்த உற்சவத்தின் ஒரு பகுதியாக, நான்காம் நாளில் நம்பெருமாள் விசேட அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கல்லால் அலங்கரிக்கப்பட்ட அரைக் கொண்டை சாற்றியும், தங்கம் மற்றும் வைரங்களால் செய்யப்பட்ட ஆபரணங்களை அணிந்தும், நம்பெருமாள் அர்ஜீன மண்டபத்தில் எழுந்தருளினார்.
நாள்தோறும் நடைபெறும் உற்சவங்களில், நம்பெருமாளுக்கு அழகிய அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீப ஆராதனை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், நான்காம் நாள் நிகழ்விலும் நம்பெருமாளுக்கு சிறப்பான மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்தத் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, நம்பெருமாளை தரிசித்து ஆன்மிக இன்பம் பெற்றனர்.