விவசாயிகளை நம்பிக்கையூட்டி ஏமாற்றுவது தான் பாராட்டப்படும் நல்லாட்சியா? – முதல்வர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் சவால்
தமிழகத்தில் மஞ்சள் உற்பத்தியில் முன்னணியில் விளங்கும் ஈரோடு மாவட்டத்தில், நவீன மஞ்சள் ஆராய்ச்சி மையமும், அரசு சார்பில் வேளாண் கருவிகள் தயாரிப்பு தொழிற்பேட்டையும் அமைக்கப்படும் என அறிவித்தீர்களே, அந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்தனவா முதல்வர் ஸ்டாலின்? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதள பதிவில்,
மஞ்சள் உற்பத்தியை அதிகரிப்பதிலும், விவசாயிகள் விளைவிக்கும் மஞ்சளுக்கு நியாயமான விலை நிர்ணயிப்பதிலும் திமுக அரசு அலட்சியம் காட்டி வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், நீண்ட காலமாக ஈரோடு பகுதி விவசாயிகள் கோரி வரும் மஞ்சள் ஆராய்ச்சி மையம் அமைக்கும் கோரிக்கையையும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது எந்த வகையில் நியாயம்? இதுவும் கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றுதானே? என்றும் நயினார் நாகேந்திரன் வினவியுள்ளார்.
உலக அளவில் புகழ்பெற்ற ஈரோட்டு மஞ்சளுக்கு சர்வதேச சந்தையில் தனித்த அடையாளம் கிடைக்கும்படி புவிசார் குறியீடு வழங்கி கௌரவித்தது மத்திய அரசு என குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் அந்த மஞ்சளை உற்பத்தி செய்து உலக சந்தைக்கு அனுப்பும் ஈரோடு விவசாயிகளை தொடர்ந்து புறக்கணித்து வருவது திமுக அரசின் செயல்பாடு என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், விவசாயத்திற்கு தேவையான நவீன கருவிகளுக்காக தமிழக விவசாயிகள் வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களை சார்ந்திருக்கும் சூழலில், வேளாண் கருவிகள் உற்பத்தித் தொழிற்பேட்டை அமைப்பதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியையும் கடந்த நான்கரை ஆண்டுகளாக நிறைவேற்றாமல் வைத்திருப்பதன் காரணம் என்ன? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டின் அடித்தளமாக விளங்கும் விவசாயிகளை இவ்வாறு நம்பிக்கையூட்டி ஏமாற்றுவது தான் நாடு போற்றும் சிறந்த ஆட்சியின் அடையாளமா? என முதல்வர் ஸ்டாலினை நோக்கி நயினார் நாகேந்திரன் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார்.