டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் கடும் கேள்வி
காலி மதுபாட்டில்களை மீளச் சேகரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கூடுதல் பணியாளர்களை ஏன் நியமிக்கவில்லை? என்று டாஸ்மாக் நிர்வாகத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
இதுதொடர்பான வழக்கு, நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அமர்ந்த அமர்வில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணையின் போது, டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, தற்போதுள்ள பணியாளர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதால், காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் பணிக்காக கூடுதல் ஊழியர்களை நியமிக்க அரசு உத்தரவிட வேண்டும் என நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தார்.
மேலும், தமிழகத்தில் தற்போது 22 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்பாட்டில் உள்ளதாகவும், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் மாநிலம் முழுவதும் இந்தத் திட்டம் விரிவாக்கப்படும் என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், காலி மதுபாட்டில்களை மீளச் சேகரிக்கும் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்துவதற்காக, கூடுதல் பணியாளர்களை நியமிக்க டாஸ்மாக் நிர்வாகம் ஏன் முன்வரவில்லை எனக் கேள்வி எழுப்பினர்.
அத்துடன், ஊழியர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை ஆய்வு செய்ய, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு தயாரித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.