நெத்திமேடு கரியபெருமாள் கோயில் வளாகம் திமுக அலுவலகமாக பயன்படுத்தப்படுவதாக புகார்
சேலம் மாவட்டத்தில் உள்ள நெத்திமேடு கரியபெருமாள் கோயிலுக்குச் சொந்தமான மண்டபம், திமுக பகுதி அலுவலகமாக மாற்றப்பட்டுள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நெத்திமேடு மலையின் மீது அமைந்துள்ள கரியபெருமாள் கோயிலின் அர்த்த மண்டபம், மலையடிவாரத்தில் உள்ள விநாயகர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தை தற்போது திமுக பகுதி செயலாளர் கார்த்தி தனது அலுவலகமாக பயன்படுத்தி வருவதாகவும், அங்கு அடிக்கடி அரசியல் கூட்டங்கள் நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், எஸ்ஐஆர் தொடர்பான பணிகள் குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், கோயில் வளாகத்திலேயே அரசியல் நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
அதோடு, கோயில் நிர்வாகத்தின் சார்பில் திமுகவினருக்கு தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், கோயிலில் அரசியல் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கிய அறநிலைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.