வந்தே மாதரம் பாடலின் நீக்கப்பட்ட வரிகள் – உருவான பிரிவினை!
இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில் மக்களை எழுச்சியூட்டிய வந்தே மாதரம் பாடலே, 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா முன்னேறிய நாடாக உயருவதற்கான உந்துசக்தியாக இருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மேலும், பாடலின் முக்கியமான பகுதிகள் நீக்கப்பட்டதே நாட்டில் பிளவை விதைத்தது என்றும் அவர் விமர்சித்துள்ளார். இதுகுறித்த தொகுப்பை பார்க்கலாம்.
வங்கக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய தேசபக்திப் பாடல் “வந்தே மாதரம்”, முதன்முதலில் 1875 நவம்பர் 7 அன்று வங்க தரிசனம் என்னும் இதழில் வெளியானது. பின்னர், 1882ஆம் ஆண்டு அவர் எழுதிய புகழ்பெற்ற ஆனந்தமடம் நாவலிலும் இந்தப் பாடல் இடம்பெற்றது. ஆங்கிலேயர்களின் “God Save the Queen” என்ற பாடலுக்கு மாற்றாக இந்தியர்களின் மனதில் தேசிய உணர்வை எழுப்பும் நோக்கில் வந்தே மாதரம் உருவானது. இந்திய கலாசாரம், அரசியல் விழிப்புணர்வு மற்றும் தேசிய மரபுகளின் குறியீடாக இந்தப் பாடல், சுதந்திர இயக்கத்தின் குறிக்கோளாக இருந்தது.
வந்தே மாதரம் பாடல் உருவாகி 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் திருவிழாக்களை கடந்த நவம்பர் 7 அன்று பிரதமர் தொடங்கி வைத்தார். அப்போது, 1937ஆம் ஆண்டு பாடலின் சில முக்கிய சரணங்கள் நீக்கப்பட்டதால் அதன் உண்மையான உணர்ச்சி பாதிக்கப்பட்டது என்றும், அதுவே நாட்டில் பிரிவினைக்கான இடைவெளியை உருவாக்க உதவியது என்றும் மோடி குற்றம் சாட்டினார். நாட்டை பிளவு பண்ணும் மனப்பான்மை இன்று வரை சவாலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு காலத்துக்கும் பொருந்தக்கூடிய இந்தப் பாடல், இந்தியா பயங்கரவாதத்துக்கு எதிராக எழுந்தபோதும் தாய்க்குரிய துர்க்கை வடிவில் எதிர்த்து நிற்கும் சக்தியைக் காட்சி படுத்தியது. 1896இல் கொல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் டாகூர் பாடியதால் இது தேசிய முழக்கமாக பரவலாகப் பிரபலமானது. ஆனால் அந்நிகழ்வுக்கு தலைமை தாங்கிய ரஹ்மத்துல்லாஹ் சயானி, பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அம்சமும் குறிப்பிடத்தக்கது.
வங்கத்தில் நடைபெற்ற சுதேசி இயக்கத்தில் வந்தே மாதரம் போராட்டத்தின் சின்னமாக ஒலித்தது. நாட்டின் பல பகுதிகளில் நடந்த எதிர்ப்புக் கூட்டங்களில் இந்தப் பாடல் போராட்டத்தின் உயிர் ஊட்டமாக இருந்தது. பின்னர் 1939 ஜனவரியில் காந்திஜி, பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே தேசியப் பாடலாக ஏற்றுக் கொள்ள தீர்மானித்தார். அவை “தாயே, உன்னை வணங்குகிறேன்” என தாய்நாட்டைப் புகழும் வடிவில் அமைந்தவை.
பாடலின் மூன்றாவது முதல் ஆறாவது சரணங்கள் இந்தியத் தாயை துர்க்கை, லட்சுமி போன்ற தெய்வ வடிவங்களுடன் ஒப்பிட்டு வணங்குகின்றன. நான்காவது சரணத்தில் துர்க்கை தேவியின் கைகளைக் குறிப்பிடும் பாகங்கள் இருப்பதாலும், இதுவே சில சமயக் குழுக்களின் எதிர்ப்புக்கு காரணமாக அமைந்தது. 1950 ஜனவரி 24 அன்று, ராஜேந்திர பிரசாத் தலைமையிலான அரசியலமைப்புச் சபை, “ஜன கண மன” உடன் சேர்ந்துவந்து, வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களுக்கு அதிகாரப்பூர்வ தேசியப் பாடல் அந்தஸ்து வழங்கியது.
பாடலின் நான்கு சரணங்களை காங்கிரஸ் நீக்கியது நாட்டில் பிரிவினையை விதைத்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். அதுமட்டுமல்ல, 2006ஆம் ஆண்டு ஜமியத் உலமா-இ-ஹிந்த் அமைப்பின் பொதுச் செயலாளர் மஹ்மூத் மதானி, உண்மையான முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாட முடியாது என்று அறிவித்தார். 2009இல் தியோபந்தில் இப்பாடலுக்கு எதிராக ஃபத்வாவும் வெளியிடப்பட்டது.
இந்த பின்னணியில், வந்தே மாதரம் பாடல் 150 ஆண்டு நிறைவை நினைவுகூரும் மக்களவையின் சிறப்பு விவாதத்தைத் தொடங்கிய பிரதமர் மோடி, வடக்கிலிருந்து தெற்கு, கிழக்கிலிருந்து மேற்கு வரை இந்தியர்களை ஒருங்கிணைத்த பாடல் மீண்டும் தேசத்தை ஒன்றிணைக்கும் காலம் இது என உறுதியாக குறிப்பிட்டார்.
சுதந்திர வீரர்கள் கனவுகொண்ட இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் உந்துசக்தியும் தேசிய உறுதியும் வந்தே மாதரம் கொடுக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.