மதுரையில் முதல்வர் வருகையால் அரசு–தனியார் பேருந்துகள் மாற்றுப்பயணத்தில்; பொதுமக்களுக்கு கடும் அவதி
மதுரையில் நடந்த முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சிக்காக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவில் பணியமர்த்தப்பட்டதால், கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வழக்கமான போக்குவரத்து குறைந்து பொதுமக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின், பல திட்டங்களைத் திறந்து வைக்கவும், நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளவும் மதுரை வந்திருந்தார். மேலமடை பகுதியில் 150 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட ‘வேலு நாச்சியார் மேம்பாலத்தை’ அவர் திறந்து வைத்தார். பின்னர், உத்தங்குடி பகுதியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.
இந்த விழாவில் மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஒரு லட்சம் பொதுமக்களை அழைத்து வர திமுக நிர்வாகிகள் ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் வாகனங்களை பயன்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக, விதிமுறைகளுக்கு விரோதமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பேருந்துகள் நிகழ்ச்சிக்கு திருப்பி விடப்பட்டதால், சாதாரணப் பயணிகளுக்கு போதிய பஸ்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை பல இடங்களில் மக்கள் மணிநேரக்கணக்கில் காத்திருந்து அவதிப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.