திருப்பரங்குன்றம் தீப ஏற்ற விவகாரத்தில் – நீதிமன்ற உத்தரையை மீறியதாக தமிழக அரசுக்கு குற்றச்சாட்டு
திருப்பரங்குன்றம் மலைச் சிகரத்தில் உள்ள தீபத்தூணில் கார்த்திகைத் தீபத்தை ஏற்ற வேண்டும் என்பதையும், அதற்காக அமல்படுத்தப்பட்ட 144 தடை உத்தரவை நீக்க வேண்டும் என்பதையும் உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்த ஆணை நடைமுறைப்படுத்தப்படாததால் பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிபதி என்.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்புப்படி, மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும். ஆனால் தீர்ப்புக்குப் பிறகும், அங்கு கூடியிருந்த பாஜகவினரையும், பக்தர்களையும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை காரணம் காட்டிய காவல்துறையினர், தீபமேற்ற அனுமதி கொடுக்க முடியாது என்று தெரிவித்தனர். இதனால் காவல்துறை மற்றும் தீபமேற்ற கோரி வந்த குழுக்கள் இடையே கடும் தகராறு ஏற்பட்டது. நிலைமை பதட்டமாக மாறியது.
சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், போலீசார் மேலிட அழுத்தத்தில் முடிவுகளை எடுக்கிறார்கள் எனவும், நீதிமன்ற ஆணையை மதிக்காத போக்கில் செயல்படுகிறார்கள் எனவும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா, ராம் சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் போலீசார் தங்களது நிலைப்பாட்டை மாற்றவில்லை. இதன்போது 144 தடை உத்தரவை மீறியதாகக் கூறி பலரை காவல்துறை கைது செய்தது.
இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டதில், 144 தடை உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்த பிறகும், திமுக அரசு தடை விதிப்பதைத் தொடர்ந்து செய்வது சட்ட அதிகாரத்தை வெளிப்படையாக அவமதிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டார்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், இந்து சமூகம் தொடர்பான விஷயங்களில் திமுக அரசு பிடிவாதம் காட்டாமல் நீதிமன்ற உத்தரவை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், திருப்பரங்குன்றம் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. குறிப்பிட்ட இடத்தில் தீபமேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு எதிராக மாநிலம் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளது.