சிஐஎஸ்எஃப் பாதுகாப்பை தடுத்தது யார்? – திருப்பரங்குன்றம் வழக்கில் மதுரை உயர்நீதிமன்றம் கடும் கேள்வி
திருப்பரங்குன்றத்தில் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்குவதை யார் தடுத்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துமாறு மதுரை உயர் நீதிமன்றம் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் விட்டதாகக் கூறி, இந்து தமிழர் கட்சி நிர்வாகி ராம ரவிக்குமார் அவமதிப்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் தலைமையிலான அமர்வில் விசாரிக்கப்பட்டது.
விசாரணையின் போது, மாவட்ட ஆட்சியரும் காவல் ஆணையரும் நேரில் ஆஜராகாமல் இருந்தது மனுதாரர் தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், தீபம் ஏற்ற வேண்டும் என்ற உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என்றும் கூறப்பட்டது.
அரசு தரப்பு, இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்தது. இதையடுத்து நீதிபதி, இந்த பிரச்சினையில் இதுவரை மூன்று உத்தரவுகள் பிறந்துள்ளன; ஆனால் அரசு தரப்பு அவற்றை அமல்படுத்தவில்லை எனக் குறிப்பிட்டார்.
அதோடு, திருப்பரங்குன்றத்தில் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு வழங்குவதை யார் தடுத்தார்கள்? என்ற கேள்வியை நீதிமன்றம் நேரடியாக எழுப்பியது. ஏன் உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதைத் தெளிவாக அரசு அறிக்கை மூலம் விளக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.